
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியில் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் கலக்கிய தமிழகத்தை சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். மேலும் சாய் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவர் என்பதால் அவரை அணியில் சேர்த்ததாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய பேட்டிங்கை முன்னேற்ற கவுண்டி தொடர்தான் உதவியது என்று சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "கவுண்டி கிரிக்கெட்டில் நான் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன் என்று நினைக்கிறேன். அந்த போட்டிகள் எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளித்துள்ளன. நேர்மையாகச் சொன்னால் என்னுடைய பேட்டிங் டெக்னிக்கில் இருந்த ஒரு சில குறைபாடுகளை நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியபோதுதான் கவனித்தேன். கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியதன் மூலம் என்னுடைய பேட்டிங்கில் நிறைய மாற்றங்கள் செய்ய உதவி கிடைத்தது. இது எனது பேட்டிங்கை நுட்ப ரீதியாகவும் அடிப்படை ரீதியாகவும் பல மடங்கு மேம்படுத்தியது.
பேட்டிங்கில் அடிப்படைகள் மிக முக்கியமான விஷயம் என்று அது எனக்குச் சொன்னது. மேலும் நான் கற்றுக்கொண்டவற்றில் அதிக கவனம் செலுத்துவேன். நிச்சயமாக, 3 மாத வெள்ளைப்பந்து (ஐ.பி.எல்.) போட்டிக்குப் பிறகு பேட்டிங்கில் சில விஷயங்கள் மாறியிருக்கும். அடிப்படைகளில் அதிக கவனம் செலுத்தி, அவற்றை மீண்டும் சிவப்பு பந்து (டெஸ்ட்) கிரிக்கெட்டுக்கு கொண்டுவர சிறிது நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன்" என கூறினார்.