
சிட்னி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று நேற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
டெல்லி கேப்பிட்டல்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் ,லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.
இதில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.
மும்பை அணி அடுத்து இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆமதாபாத்தில் நாளை சந்திக்கிறது.
இந்நிலையில் இந்த ஐ.பி.எல். தொடரில் யார் கோப்பையை வெல்வார்கள்? என ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேவிட் வார்னரிடம் ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வார்னர், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும். ஜோஷ் ஹேசில்வுட் ஆட்ட நாயகன் என்று நான் நினைக்கிறேன்" என பதிலளித்தார்.