
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. இதன் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.
அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த சீசனை போலவே சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.