
பெங்களூரு,
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.
ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அந்த அணி பல விமர்சங்களை எதிர்கொண்டது. இருப்பினும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே சென்றதே தவிர குறையவில்லை.
இந்நிலையில் அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த சூழலில் அந்த அணியின் வணிக மதிப்பும் உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி ஆர்சிபி அணியின் வணிக மதிப்பு 227 மில்லியன் அமெரிக்க டாலிரில் இருந்து 269 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல்.-ன் அதிக மதிப்பு மிக்க அணியாக ஆர்சிபி உருவெடுத்துள்ளது.
கடந்த முறை முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 235 மில்லியன் அமெரிக்க டாலருடன் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 242 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் வணிக மதிப்பும் இந்த முறை கணிசமாக அதிகரித்துள்ளது.
10 அணிகளின் வணிக மதிப்பு பின்வருமாறு:-
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 269 மில்லியன் டாலர்கள்
2. மும்பை இந்தியன்ஸ் - 242 மில்லியன் டாலர்கள்
3. சென்னை சூப்பர் கிங்ஸ் - 235 மில்லியன் டாலர்கள்
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 227 மில்லியன் டாலர்கள்
5.சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 154 மில்லியன் டாலர்கள்
6. டெல்லி கேப்பிடல்ஸ் - 152 மில்லியன் டாலர்கள்
7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 146 மில்லியன் டாலர்கள்
8. குஜராத் டைட்டன்ஸ் - 142 மில்லியன் டாலர்கள்
9. பஞ்சாப் கிங்ஸ் - 141 மில்லியன் டாலர்கள்
10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 122 மில்லியன் டாலர்கள்