இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் (60) நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி ஒருவரை எந்த உயரத்துக்கும் கொண்டுசெல்லும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது நாராயணனின் வாழ்க்கைப் பயணம்.
அன்றாட தேவைகளுக்கே சிரமப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் நாராயணன். நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் அருகேயுள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வன்னியபெருமாள், தங்கம்மாளின் மூத்த மகன் நாராயணன். இவருடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். 6 குழந்தைகளின் படிப்பு, உணவுத் தேவைகளை, தேங்காய் வியாபாரியான வன்னியபெருமாளின் சிறு வருமானத்தை வைத்தே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. நாராயணன் 8-ம் வகுப்பு வரை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தார்.