ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்த பக்தர்கள்: 20 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்

6 hours ago 3

திருப்பதி: வார விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள். இலவச தரிசனத்தில் 20 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்ரீத் மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் சிலாதோரணம் வரை 3 கிலோ மீட்டருக்கான வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இதனால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அலிபிரி மலைப்பாதையிலும் வேண்டுதலின்படி பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. வாகனங்கள் செல்லும் அலிபிரி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருப்பதால் நீண்ட நேர சோதனைக்கு பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது.

வரிசையில் உள்ள பக்தர்களுக்கும், திருமலையில் முக்கிய இடங்களில், தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் தொடர்ந்து சாம்பார் சாதம், உப்புமா, காபி, பால் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை 72 ஆயிரத்து 174 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.2.88 கோடி காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் பொறுமையாக இருந்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு அளித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

The post ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்த பக்தர்கள்: 20 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article