
புதுடெல்லி,
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உள்நாட்டு, சர்வதேச வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு சுமார் 20 சதவீதம் குறைந்து விட்டது.
இத்தகவலை இந்திய சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதம் வரையும், சர்வதேச வழித்தடங்களில் முன்பதிவு 18 முதல் 22 சதவீதம் வரையும் குறைந்துள்ளது.
டிக்கெட்டுகளுக்கு வரவேற்பு இல்லாததால், ஏர் இந்தியா விமான டிக்கெட் கட்டணம் சராசரியாக 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளை ரத்து செய்வது 15 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இருப்பினும், இது தற்காலிக நிலைதான். வரும் நாட்களில் இதில் மாற்றம் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.