சென்னை: தமிழகத்தை பல வழிகளிலும் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதால் வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழகத்தையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது. இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழக மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழத்துக்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரிப்பது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது.