
புதுடெல்லி,
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனுசின் சகோதரரான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து ஜெயராம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் மூத்த காவல் அதிகாரியான ஏடிஜிபி ஜெயராம் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அப்படி இருக்க எதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?. அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு தெரிவிக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெற்று நாளை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர். இதனால் ஏடிஜிபியின் சஸ்பெண்ட் ரத்தாகுமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.