
சென்னை,
தமிழ் நாட்டின் துணை முதலமைச்சராக இருப்பர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவர் நடித்த படங்களில் ஒன்று 'ஏஞ்சல்'. இந்த படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கினார். இப்படத்தை ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் தயாரித்தார். கடந்த 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, 80 சதவீதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது.
ஏஞ்சல் படப்பிடிப்பு 20 சதவீதம் நிலுவையில் இருக்கும் போது, 'மாமன்னன்' படம்தான் தனக்கு கடைசி படம் என்றும் நடிப்பில் இருந்து விலகுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துவிட்டார். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு சென்று விட்டார். இதனால் ஏஞ்சல் படம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதாவது, 'ஏஞ்சல்' படத்தை முடித்து கொடுக்காததால் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை மார்ச் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.