சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதோடு புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குள் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி ஆய்வகங்களையும் பார்வையிட்டார். விழாவில் பேசிய தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி, இந்த அரசை திராவிட மாடல் அரசு என்று கூறினாலும் ஆன்மிக அரசு என்று கூறலாம்.
இன்று பல ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. வெள்ளி தங்க தேர்களையும் உருவாக்கி இருக்கிறார்கள். 197 தேர்களை நிறுத்தும் கொட்டகைகளையும் உருவாக்கி இருக்கிறார்கள்’என்றார். தொடர்ந்து குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பலம் தேசிகர் பேசியதாவது: ஆன்மிக முதல்வராக விளங்கும் முதலமைச்சர் மிகச்சிறப்பாக ஆன்மிக பணியை ஆற்றிவருகிறார். எட்டா கனியா இருந்த கல்வியை பறித்து ஏழை எளிய குழந்தைகளுக்கு கொடுத்தவர் நமது முதல்வர்.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பேசிய ஆதினம், இதுபோன்ற தீபத்து ஏற்படாமல் தடுக்க என்ன தீர்வு என கலைஞர் கேட்டார். அதற்கு கூரை இல்லாத பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் கூரை இல்லா பள்ளிகள் உருவாக காரணம் கலைஞரும் இன்றைய முதல்வரும் தான் என்றார். அரசு பள்ளிகளில் கிடைக்கும் 7.5 சதவீத ஒதிக்கீட்டு சலுகைகளை அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும். காரணம் அங்கும் ஏழை பிள்ளைகள் தான் படிக்கிறார்கள் என்று குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பலம் தேசிகர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
விழாவில் தவத்திரு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீ சிவஞானம் பேசியதாவது: அறநிலையத்துறை தேவையா என பல செய்திகள் வருகிறது. அரசு செயல்படுவதற்கு திட்டங்கள் தேவை. வழிமுறைகள் தேவை. அதற்குத்தான் சட்டத்தை உருவாக்கினோம். இந்த வேலையை செயல்படுத்த நல்ல துறை தேவைப்பட்டது. அப்படி தான் அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் என்பது கோயில்களை நிர்வகிப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது. இப்படி நமது முதல்வரின் ஆட்சி என்பது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பாராட்டினார்.
The post ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ரூ.11.15 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் திறப்பு; முதல்வர் சிறப்பாக ஆன்மிக பணிகளை ஆற்றுகிறார்: குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல தேசிகர் பாராட்டு appeared first on Dinakaran.