தாம்பரம்: எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்விற்காக வாவ் என்ற மையத்தை தொடங்கியுள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகச்சிறப்பான சிகிச்சை பராமரிப்பை பெண்கள் பெறுவதை உறுதி செய்யும் விதத்தில் நோயாளிகள் நலன் மீது கூர்நோக்கம் கொண்ட விரிவான, உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதே இம்மையத்தின் செயல்திட்டமாகும். மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி வி.பி.சந்திரசேகரன் முன்னிலையில் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிமங்கை சத்தியநாராயணன் இம்மையத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் பதிவாளர் மைதிலி, சார்பு துணைவேந்தர் நித்தின் எம் நகர்கர், எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், மருத்துவ கண்காணிப்பாளர் சுவாமிநாதன், முதுநிலை நிபுணர் சாஸ்வதி திரிபாதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிமங்கை சத்தியநாரயணன் கூறியதாவது: பெண்களின் அனைத்து உடல்நல தேவைகளையும் கருத்தில் ெகாண்டு இந்த மையம் மைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளிக்கும் வசதியான, பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட சிகிச்சை பராமரிப்பை உறுதி செய்ய உலகத்தரத்திலான தொழில்நுட்ப சாதனங்களும், வசதிகளும் வாவ்-ல் நிறுவப்பட்டிருக்கின்றன.
நவீன லேபர் மற்றும் பிரசவ அறைகள், மகப்பேறு வார்டுகள், பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, கருவுறலுக்கான கிளினிக்குகள், அல்ட்ராசவுண்ட் மற்றும் இமேஜிங் சோதனை வசதிகள், மகளிர் பிறப்புறுப்பு சார்ந்த அறுவைசிகிச்சை அரங்குகள், மார்பக ஆரோக்கியம் மற்றும் ஸ்கிரினீங் பிரிவுகள், கருவுறலுக்கான கலந்தாலோசனை மற்றும் ஆலோசனை அறைகள், அவசரநிலை மற்றும் விபத்து காயங்களுக்கான சிகிச்சை பிரிவு, இயன்முறை சிகிச்சை மற்றும் இடுப்புக்கூடு தள மறுவாழ்வு சேவைகள் ஆகிய அனைத்து வசதி நிலைகளும் வாவ் பிரிவில் அமைந்துள்ளன.
மகளிர் நோயியல் நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், தாய்-சேய் சிறப்பு வல்லுநர்கள், சருமவியல் மருத்துவர்கள், இடுப்புக்கூடு தள சிகிச்சையாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர்கள் குழுவோடு ஊட்டச்சத்து நிபுணர்கள், உணவியல் வல்லுநர்கள், பால் சுரப்பு சிறப்பு நிபுணர்கள் மற்றும் யோகா ஆசிரியர்கள் ஆகியோரும் இங்கு பணியாற்றுகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.
The post எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் பெண்களின் நல வாழ்விற்காக வாவ் என்ற பிரத்யேக மையம் appeared first on Dinakaran.