எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் 8வது நாளாக போர் ஒப்பந்தம் மீறல்: இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு

1 month ago 7

காஷ்மீர்: எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இன்று 8வது நாளாக போர் ஒப்பந்தம் மீறப்பட்ட நிலையில் இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு நடந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது; அதேபோல் அட்டாரி எல்லையை மூடியது, பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. இதனால் பாகிஸ்தான் தனது விமான வான்ெவளி பாதைகளை மூடியது; இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியது. அடுத்தடுத்த அறிவிப்புகளால் இரு நாடுகளுக்கிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தொடர்ந்து 8வது இரவாக பாகிஸ்தான் மீறியுள்ளது.

இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடியை கொடுத்துள்ளது. இன்று அதிகாலை, பாகிஸ்தான் படைகள் ஜம்மு – காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 8வது இரவாக அமைதி ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தின. குறிப்பாக குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நவ்ஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதற்கு இந்திய ராணுவம் உடனடியாகவும், பொருத்தமாகவும் உரிய பதிலடி கொடுத்தது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி இரவு, பாகிஸ்தான் படைகள் இதே பகுதிகளில் தாக்குதல் நடத்தியபோது, இந்திய இராணுவம் பதிலடி கொடுத்தது; இந்த மோதலில் இந்திய தரப்பில் பாதிப்பு ஏதும் இல்லை. கடந்த 2003 மற்றும் 2021ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தங்களை மீறும் வகையில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் 8வது நாளாக போர் ஒப்பந்தம் மீறல்: இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Read Entire Article