
சென்னை,
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் (மே) 4-ந்தேதி நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 14-ந்தேதி வெளியாகின. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9 ஆயிரத்து 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பி.டி.எஸ் படிப்பை பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களும் உள்ளன.
இந்த சூழலில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 25-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று, மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க வருகிற 29-ந்தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கி மருத்துவ மாணவர் சேர்க்கை குழு உத்தரவிட்டுள்ளது. கால அவகாசத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.