சென்னை : எமிஸ் இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்வதில் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. பணிச்சுமை குறைக்கப்பட்டு வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. பள்ளி அளவில் தரவுகளை உள்ளீடு செய்வதை குறைத்து அத்தியாவசிய விவரம் மட்டும் உள்ளீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி மேலாண்மை தகவல் மையம் இணையதளத்தில் மாணவர் தகவல், வருகை, செயல்பாடுகள் உள்ளிட்டவை தினசரி உள்ளீடு செய்ய வேண்டும். பல தரவுகளை தினசரி ஆசிரியர்கள் உள்ளீடு செய்வதால் கற்பித்தல் பணிகள் பாதித்து கற்பித்தலில் கவனம் செலுத்த முடியவில்லை.
பணிச் சுமையை குறைக்க வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பணிகளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி அளவில் தரவுகளை உள்ளீடு செய்வதை குறைத்து அத்தியாவசிய விவரங்களை மட்டும் உள்ளீடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியர் நிபுணத்துவ மேம்பாடு (TPD) பயிற்சியின் போது ஆசிரியர்களின் தரவு உள்ளீட்டை குறைப்பதற்காக, பயிற்சி வருகை, கருத்து மற்றும் வினாடி வினா தொகுதிகள் நீக்கம் செய்யப்படுகின்றன. ATAL ஆய்வகம் தொகுதி பதிவு EMIS லிருந்து அகற்றப்படும். நீக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் சார்ந்த தொகுதிகள்: நிதிப் பதிவு. நிறுவனப் பதிவு, பள்ளி நன்கொடைப் பதிவு. தகவல் தொடர்புப் பதிவு, மனுக்கள் மற்றும் செயல்முறைப் பதிவு, உதவித்தொகை மற்றும் மாணவர் ஊக்கப் பதிவு, ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கான மின் கட்டண விவரங்கள்
* நூலக புத்தக விநியோக விவரம்: நூலக புத்தகப் பதிவுகளில் யார் எந்தெந்த புத்தகங்கள் பயன்படுத்தி உள்ளனர் மற்றும் தற்போதைய புத்தக இருப்பு ஆகியவற்றை மட்டுமே பதிவேற்றம் செய்தல் போதுமானதாகும்.
* வாசிப்பு இயக்கம்: எண்ணும் எழுத்தும் திட்ட மாணவர் தரநிலை விவரங்களிலிருந்தே தரவுகளைப் பெற்று வாசிப்பு இயக்கப் பதிவுகளுக்கு மாற்றப்படும். வாசிப்பு இயக்கத்திற்கான தனியான பதிவு மேற்கொள்ள வேண்டியதில்லை.
* கலைத் திருவிழா: வெற்றியாளர் பட்டியல்களை மட்டுமே பதிவு செய்ய நெறிப்படுத்தப்பட்டுள்ளது. பங்கேற்றோர் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.
* தொடர் மற்றும் வளரறி மதிப்பீடுகள் (FA & SA):
FA(A) & FA(B): கேள்வி வாரியான தரவு உள்ளீடு செய்வதை விடுத்து, மாணவர் வாரியான மதிப்பெண்கள் மட்டுமே உள்ளீடு செய்யப்படல் வேண்டும். SA: கேள்விகள் வாரியாக மதிப்பெண்கள் கைப்பேசி அல்லது இணைய தளங்களின் மூலம் பதிவிட்டால் போதுமானது.
* விலையில்லா பொருட்கள் மற்றும் பாடப்புத்தகங்கள்:
பாடப்புத்தகங்களுக்கான Barcode அடிப்படையிலான கண்காணிப்பு, மாநில அளவில் இருந்து தலைமையாசிரியர்கள் வரை செயல்படுத்தப்படும். பெறப்பட்ட, ஒட்டு மொத்தமாக விநியோகிக்கப்பட்ட, இருப்பு மற்றும் தேவைகள் ஆகிய விவரங்களை மட்டுமே பதிவிட்டால் போதுமானதாகும். மாணவர்கள் வாரியாக பதிவு செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
* குழுக்கள் மற்றும் மன்றங்கள்:
அனைத்து குழுக்கள் மற்றும் மன்றங்கள் சார்ந்த விவரங்களை தனித்தனியே பதிவிட வேண்டியதற்கு மாறாக இவை அனைத்தையும் House System என்ற அலகின்கீழ் கொண்டு வரப்படும். இதன் வாயிலாக தனித்தனியாக மன்றங்கள் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை
* IFHRMS மற்றும் பணியாளர் தரவு ஒருங்கிணைப்பு:
பணியாளர்கள் பதிவேடு. ஓய்வூதியங்கள் மற்றும் IFHRMS ஒருங்கிணைக்கப்பட்ட தரவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உடன்
* இடைநிற்றல் (Dropout) கண்காணிப்பு:
15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களப் பற்றிய விவரம் மட்டுமே பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
* கால அட்டவணை மேலாண்மை:
கால அட்டவணை சார்ந்த உள்ளீடுகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பதிவு செய்தால் போதுமானதாகும்.
* எண்ணிய உள்கட்டமைப்பு (Digital Infrastructure):
ICT மற்றும் இணைய வசதி சார்ந்த விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. இதன் வாயிலாக பல்வகைப் பதிவுகள் மேற்கொள்வது குறைக்கப்படுகிறது
* பள்ளி சார்ந்த விவரங்கள் :
பள்ளி சார்ந்த அனைத்து விவரங்களும் ஒருங்கமைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. எனவே, தனித்தனி விவரங்கள் பதிவிட வேண்டியதில்லை
இந்த நடவடிக்கைகள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நிர்வாக தரவு உள்ளீடு சார்ந்த பணிச்சுமையை கணிசமாகக் குறைத்து. கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வழிகோலும். அதே நேரத்தில், இந்த மாற்றங்கள் EMIS தரவு மேலாண்மை அமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் உடன் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே. இச்சுற்றறிக்கையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி. தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்), வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது
மேலும், இச்சுற்றறிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புதலை அனைத்து பள்ளி தலைமையாசிரியரிடம் பெற்று அலுவலக கோப்பில் பராமரிக்குமாறும் அவ்விவரத்தினை சார்ந்த இயக்ககத்திற்கு தெரிவிக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
The post எமிஸ் இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்வதில் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை குறைப்பு appeared first on Dinakaran.