
ஜெய்ப்பூர்,
இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை நினைவுகூறும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி கஜேந்திர செகாவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலை இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயமாகும். அந்தக் காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அதிகாரத்தை தக்கவைப்பதற்கான முயற்சியில் அரசியலமைப்பை நசுக்கினார்.
1971 போரில் பாகிஸ்தானை இந்தியா வென்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் ஆணவம் தலைதூக்கியபோது எமர்ஜென்சிக்கான விதைகள் விதைக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது, பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்பட்டது.
எமர்ஜென்சி காலகட்டத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் கருப்பு நாள் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.