என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் போட்டி.. கலந்தாய்வு எப்போது?

10 hours ago 3

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். அதன்படி, விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருந்தாலும், அதில் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அந்தவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியிருக்கின்றனர். விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான போட்டியில் 2.44 லட்சம் இருக்கின்றனர். அவர்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 102 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். சான்றிதழ்களை 9-ந்தேதி வரை (நாளை மறுதினம்) பதிவேற்றம் செய்யலாம்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதாவது 2021-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் முறையே 1,45,043, 1,69,083, 1,87,847, 2,09,653 பேர் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி படிப்புகளில் சேருவதற்காக காத்திருந்தனர்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள காலி இடங்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருப்பார்கள். இந்த ஆண்டு அதுபோல் இல்லை. அதாவது, அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் இடங்களுக்கு, 2 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் சார்ந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், அந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, 27-ந்தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

கலந்தாய்வு குறித்த தற்காலிக அட்டவணை எப்போதும் முன்கூட்டியே வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு அப்படி வெளியிடப்படவில்லை. தரவரிசைப் பட்டியலை வெளியிடும்போது, கலந்தாய்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் எனவும், ஜூலை முதல் மற்றும் 2-வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதவிர, பி.ஆர்க் படிப்புக்கான நாடா நுழைவுத்தேர்வு ஜூன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் பி.ஆர்க் படிப்புக்கான இணையதள விண்ணப்பப்பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 30-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 463 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் (2025-26) 7 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Read Entire Article