
சென்னை,
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சாய் பல்லவி, தன் வாழ்க்கை கதையை யாராவது படமாக்கினால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக கூறினார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் ''ராமாயணம்'' படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இந்நிலையில், சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவரிடம் , 'உங்கள் வாழ்க்கை வரலாறு படமானால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம்?', என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், 'என் வாழ்க்கை கதையை படமாக்கினால், அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்றுதான் பெயர் வைப்பேன். ஏனென்றால், நாம் எல்லாரிடமும் ஒரே மாதிரி பழகுவது கிடையாது. நானும் அப்படித்தான்.
நண்பர்களுடன் ஒரு மாதிரியும், உறவினர்களிடம் வேறு மாதிரியும், பெற்றோருடன் இன்னொரு மாதிரியும் இருப்பேன். இப்படி நிறைய முகங்கள் எனக்கு உண்டு. எனவேதான் இந்த பெயரை வைக்க ஆசைப்படுகிறேன்'', என்றார்.