சென்னை: கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு;
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரியலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும் உண்டு உறையிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான, குறிப்பாக செல்போன் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18-45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதியாக குறைந்தது 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 8ஆம் வகுப்பு முதல், ITI, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு வரை படித்தவர்களுக்கு தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை உள்ள பயிற்சிக் காலத்தின் போது மதிய உணவு, காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டி மற்றும் தேனீர் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியாளர்களுக்கு சீருடை, பாடப் பொருட்கள், தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட சுய தொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோருக்கான சிறந்த பண்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட பயிற்சிகளுக்கு விளக்கப்பட காட்சிகள், தொழில் உபகரணங்களை பயன்படுத்துதல், கணினி வகுப்பு, மென் திறன் பயிற்சி மற்றும் செயல்முறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தொழிலில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இது மட்டுமன்றி பயிற்சியின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றி கதைகள் நேரடியாக எடுத்துக் கூறப்படுகிறது. இளைஞர்களை குழுவாக அழைத்துச் சென்று சந்தை ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்ள ஏதுவாக இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி நிலைய அலுவலர்களால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்து இளைஞர்கள் சுய வேலைவாய்ப்ப்பு மேற்கொள்ள கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் கடன் பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த நான்காண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 1,17,815 இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, 67,158 இளைஞர்கள் சுய தொழில் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாண்டு 37,050 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளுக்கான கால அட்டவணை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெற விரும்பினால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (அல்லது) திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம் (மகளிர் திட்டம்) மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் (BMM) ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
மேலும் விபரம் அறிய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி..!! appeared first on Dinakaran.