*நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
ஊட்டி : ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் விதிமீறல் கட்டிடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 2019ம் ஆண்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் சட்ட விரோதமாக சீலை அகற்றி பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மீண்டும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் கடந்த 1993ம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக்கூடாது. தரைத்தளம், முதல் தளம் மட்டுமே கட்ட அனுமதி.
1500 சதுர அடிக்குள் மட்டுமே கட்ட வேண்டும். புவியியல், வனத்துறை மற்றும் வேளாண் பொறியியல்த்துறை ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு நீலகிாி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனினும், வசதி படைத்த பலர் உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையாக அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் பல கட்டிடங்களை கட்டியுள்ளனர். தற்போதும் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி பல கட்டிடங்கள் கட்டப்படுவது தொடா்கிறது. இதுமட்டுமின்றி சிலர் குடியிருப்பிற்கான அனுமதி பெய்து வணிக ரீதியில் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களும் நடக்கின்றன.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் விதிமீறல் கட்டிடங்களுக்கு அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கவர்னர்சோலை, தீட்டுக்கல் பகுதியில் உாிய அனுமதியின்றி விதி மீறலுடன் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இப்புகாரின் பேரில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லி பாபு அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கடந்த 2019ம் ஆண்டு வைக்கப்பட்ட சீலை எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக அகற்றி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் மீண்டும் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். மேலும் நகராட்சியால் வைக்கப்பட்ட சீலினை அகற்றியதற்கு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட தீட்டுக்கல் பகுதியில் குடியிருப்பு அனுமதி பெய்து, வணிக ரீதியாக எவ்வித அனுமதியுமின்றி பயன்படுத்தியது மட்டுமின்றி, விதிமீறல்கள் இருந்ததால், கடந்த 2019ம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது.
கடந்த 6ம் தேதி ஆய்வு செய்த போது எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக சீல் அகற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது’’ என்றனர்.
The post ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் பரபரப்பு விதிமீறல் கட்டிடத்திற்கு மீண்டும் சீல் வைப்பு appeared first on Dinakaran.