மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களில் பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக, வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் வனப்பகுதியின் ஒருபுறம் இருந்து மற்றொரு புறம் இடம் பெயர்வதை வாடிக்கையாக்க கொண்டுள்ளன.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் ஊட்டி, கோத்தகிரி சாலைகளில் கடந்த சில தினங்களாகவே யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்விரு சாலைகளும் ஒரு வனப்பகுதியில் மற்றொரு வனப்பகுதிக்கு இடம் பெயரும் சாலைகளாக உள்ளதால் வன விலங்குகள் சர்வ சாதாரணமாக சாலையை கடந்து வருகின்றன. இதனிடையே, கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மேட்டுப்பாளையம் வழியாக நாள்தோறும் ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலை வழியாக நீலகிரி மாவடத்திற்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் மலைப்பாதையில் பயணிக்கும் போது பாதுகாப்புடனும், எச்சரிக்கையிடனும் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ‘‘ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் செல்லும் போது வாகனங்களை நிறுத்தக்கூடாது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது. வனச்சாலைகளை ஒட்டி வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் வன விலங்குகளுக்கும் உணவளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், மலைப்பாதைகளில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பயணிக்க வேண்டும். அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் போது வனவிலங்குகளை கண்டால் உடனே வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்’’ என்றார்.
The post ஊட்டி-கோத்தகிரி சாலையில் வன விலங்குகள் நடமாட்டம்: வாகனத்தை பாதுகாப்பாக இயக்க வனத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.