உழவர் சந்தையை திகைக்க வைத்த ராட்சதப் புடலை!: இயற்கை உழவராக மாறிய எம்சிஏ பட்டதாரி

1 day ago 3

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் எம்சிஏ படித்திருக்கிறார். படிப்பு சார்ந்த பணி கிடைத்தாலும், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட பிரியத்தால் குடும்பத்தோடு சேர்ந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இரண்டு போகம் நெல் சாகுபடியும், ஒரு போகம் காய்கறி சாகுபடியும் செய்யும் இவர் தற்போது ஒரு ஏக்கரில் நாட்டு ரக புடலையைச் சாகுபடி செய்திருக்கிறார். காய்கள் ஒவ்வொன்றும் ஆறு அடியில் இருந்து 7 அடி வரை வளர்ந்து பேய் விளைச்சல் கண்டுகொண்டிருக்கும் அவரது வயலுக்கு ஒரு மாலை வேளையில் சென்றோம்.

“எங்களுக்குச் சொந்தமாக பத்து ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் எட்டு ஏக்கரில் நெல்லும் மீதமுள்ள இரண்டு ஏக்கரில் காய்கறிப் பயிர்களும் சாகுபடி செய்வோம். தற்போது ஒரு ஏக்கரில் நாட்டு ரகப் புடலையை சாகுபடி செய்திருக்கிறேன். வழி வழியாக விவசாயம் செய்கிறோம். அப்பாவோடு சிறுவயதில் வயலுக்குச் சென்றதால் விவசாய வேலைகள் அனைத்தும் எனக்கு நன்றாகத் தெரியும். படித்த படிப்புக்கு வெளியே வேலை கிடைத்த போதிலும் எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக இருந்தது. அதனால், பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு அப்பாவோடு சேர்ந்து முழு நேர விவசாயம் செய்து வருகிறேன்’’ என பேசத் தொடங்கியவரிடம் புடலை சாகுபடி விவரங்கள் குறித்து கேட்டோம்.

“சராசரியாக ஒரு ஏக்கரில் புடலை விதைகளை நடுவதற்கு 350 குழிகள் வரை தேவைப்படும். ஒவ்வொரு குழிக்கும் 2 அல்லது 3 விதைகள் நட்டு வைத்தால் ஒரு விதை நன்றாக முளைக்கும். இந்த முறையில் நடும்போது விதைகள் அதிகம் தேவைப்படும். அதேசமயம் நிறைய விதைகள் வீணாகவும் வாய்ப்புள்ளது. அதனால், குழித்தட்டு முறையில் ஒரு விதைக்கு ஒரு நாற்று என்ற கணக்கில் புடலை நாற்றுகளை வளர்த்து, இரண்டு இலை வளர்ந்ததும், குழித்தட்டில் இருந்து எடுத்து நடவுக்குழியில் நடுவோம். நடுவதற்கு முன்பு நிலத்தை இரண்டு முறை சாதாரணமாக உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் போடுவோம். அதன்பின் ஒரு உழவு ஓட்டி நாற்றுகளை நடுவோம். நடும்போது, குழியில் வேப்பம்புண்ணாக்கு போடுகிறேன். இதனால் வேரில் ஏற்படக்கூடிய நோய்கள் சரியாகும். இது நாட்டு ரக புடலை 7 அடி வரை வளரும். இதனால் ஒன்பது அடி நீளமுள்ள கல்லை நட்டு அந்தக் கல் அளவுக்கு பந்தல் போட்டிருக்கிறேன். களையைக் கட்டுப்படுத்த சொட்டுநீர்ப் பாசனம் கொடுக்கிறேன். நாற்று நட்டு பத்தாவது நாளில் புடலைக்கொடி பந்தலில் ஏற ஆரம்பிக்கும். 70வது நாளில் பூவும், காயுமாக அறுவடைக்குத் தயாராகிவிடும்.

இதற்கிடையில், புடலையின் வளர்ச்சிக்கும் பூச்சியைக் கட்டுப்படுத்தவும் இயற்கை இடுபொருட்களான கோமியம், கனஜீவாமிர்தம், இலைக் கரைசல் களைப் பயன்படுத்துகிறேன். மண்ணைக் காயவிடாத மாதிரி நீர்ப் பாய்ச்சுவோம். அறுவடை தொடங்கியதில் இருந்து சராசரியாக 3 மாதங்கள் வரை காய் பறிக்கலாம். ஆரம்பத்தில் வாரம் ஒருமுறையும், அதன்பின் இரண்டு நாளுக்கு ஒரு அறுவடையும் செய்யும் அளவிற்கு மகசூல் கிடைக்கும். சராசரியாக பார்த்தால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு ஏக்கரில் 200 காய்கள் அறுவடை செய்கிறோம். அதாவது 170 கிலோ வரை கிடைக்கும். இந்தக் காய்கள் அனைத்தையும் சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு நேரடியாக அனுப்பி வைக்கிறோம்.

தொழு உரம், பந்தல் அமைத்தல், இடுபொருள் வாங்குதல் ஆகிய பணிகளுக்கு மட்டுமே நாங்கள் செலவு செய்கிறோம். மற்றபடி பராமரிப்பு, அறுவடைப் பணிகள் அனைத்தையும் நானும் எனது அப்பாவுமே செய்துகொள்கிறோம். இந்த நாட்டு ரகப் புடலை விதைகள் எங்குமே கிடைக்காது என்பதால், புடலைப் பந்தலில் கடைசி அறுவடையைப் பறிக்காமல் விதைக்காக விட்டுவிடுவோம். பின், அந்த விதைகளை விதைநேர்த்தி செய்து அடுத்த வருட புடலை சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்வோம்’’ எனக் கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
சரவணன்: 99627 32311.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 170 கிலோ புடலை அறுவடை செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ புடலை ரூ.15க்கு விற்பனை ஆகிறது. இந்தக் கணக்கில் பார்த்தால் 2 நாட்களுக்கு ஒருமுறை ரூ.2500 வருமானம் கிடைக்கிறது. புடலை போக வேறு சில காய்கறிகளையும் பயிரிட்டு அறுவடை செய்யும் சரவணன், இதே முறையில் விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்.

திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தையில், இயற்கை உழவர் சந்தை என்ற பெயரில் இயற்கையில் விளைந்த விளைபொருட்களுக்கென தனியே வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு சரவணன் கொண்டு வந்த ராட்சதப் புடலையைப் பார்த்த மாவட்ட கலெக்டர் வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும் இதேபோல மற்ற மாவட்ட உழவர் சந்தைகளிலும் சரவணனின் விளைபொருட்களை விற்பனை செய்ய ஆவன செய்வதாகவும் ஊக்கப்படுத்திப் பேசி இருக்கிறார்.

The post உழவர் சந்தையை திகைக்க வைத்த ராட்சதப் புடலை!: இயற்கை உழவராக மாறிய எம்சிஏ பட்டதாரி appeared first on Dinakaran.

Read Entire Article