
புதுடெல்லி,
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்தியா 4-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவர் பேசும்போது, 'நாம் 4-வது பெரிய பொருளாதாரமாகி விட்டோம், 4 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.340 லட்சம் கோடி) பொருளாதாரமாகி விட்டோம்.
ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது' எனக்கூறினார். சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி இந்தியா தற்போது ஜப்பானை முந்தி விட்டது எனக்கூறிய சுப்ரமணியம், தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகள்தான் இந்தியாவை விட பெரிய பொருளாதார நாடுகளாக இருப்பதாகவும் தெரிவித்தார். திட்டமிட்டபடி, எண்ணியபடி உறுதியாக செயல்பட்டால் 2 அல்லது 3 ஆண்டுகளில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடுவோம் என்றும் அவர் கூறினார்.