
அபுதாபி,
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அடுத்த ஆண்டு (2026) ஜூன்- ஜூலையில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் போட்டியை நடத்தும் 3 நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். தற்போது கண்டங்கள் வாரியாக தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
ஆசிய மண்டலத்துக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டில் 'ஏ' பிரிவில் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இவை உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோதுகின்றன. லீக் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இதில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த ஒரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது.
மற்றொரு ஆட்டத்தில் கத்தார் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வென்றது. இன்னும் ஒரு லீக் சுற்று எஞ்சியுள்ள நிலையில் டாப்-2 இடத்தை உறுதி செய்த உஸ்பெகிஸ்தான் (5 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 18 புள்ளி) உலகக் கோப்பை போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது. ஈரான் (20 புள்ளி) உலகக் கோப்பை வாய்ப்பை ஏற்கனவே எட்டிவிட்டது.
இதன் 'பி' பிரிவில் மஸ்கட்டில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜோர்டான் 3-0 என்ற கோல் கணக்கில் ஓமனையும், தென்கொரியா 2-0 என்ற கோல் கணக்கில் ஈராக்கையும் துவம்சம் செய்தன. ஜோர்டான் அணியில் 3 கோல்களையும் அலி ஒல்வான் அடித்தார். இதில் டாப்-2 இடங்களை பிடித்துள்ள தென்கொரியா (19 புள்ளி), ஜோர்டான் (16 புள்ளி) அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன.
'சி' பிரிவில் ஜப்பான் (20 புள்ளி) ஏற்கனவே உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி அடைந்து விட்டது. 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா (16 புள்ளி) தகுதி பெறுவதற்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது. வருகிற 10-ந்தேதி நடக்கும் தனது கடைசி லீக்கில் சவுதிஅரேபியாவுடன் டிரா செய்தாலே போதும். அதே சமயம் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கிய சீனா 0-1 என்ற கணக்கில் இந்தோனேசியாவிடம் தோற்றதன் மூலம் அந்த அணியின் உலகக் கோப்பை கனவு சிதைந்தது.
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு இதுவரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஈரான், ஜோர்டான், தென்கொரியா, உஸ்பெகிஸ்தான், நியூசிலாந்து, அர்ஜென்டினா ஆகிய 10 அணிகள் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.