உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

5 months ago 17

சென்னை,

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியன் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் இவருக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழக முதல்- அமைச்சர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 கோடி பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான முக்கியத்துவத்தை அளித்து வருகின்றது.

துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் தமிழ்நாட்டில் அனைவரும் பாராட்டும் வண்ணம் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக திட்டமிட்டு, நடத்தப்பட்டன. அதில் பங்குபெற்று வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீரர்களையும் முதல் - அமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.

தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷ் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் வென்று சாதனை படைத்துள்ளார்.

மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த டி. குகேஷை முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்ததோடு, தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று, டி. குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படு என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article