போச்சம்பள்ளி, ஜூன் 25: உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மாங்காயை குப்பையில் கொட்டி விட்டு, மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 35 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் பெய்த மழையால் இரட்டிப்பு மகசூல் கிடைத்தது. இருப்பினும் நோய் தாக்கம், விலையில்லாதது உள்ளிட்ட காரணங்களால் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மா ரகங்களில் 80 சதவீதம் பெங்களூரா ரக மாங்காய்கள் மாங்கூழ் தயாரிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், போதிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் மாங்காய்களை பறித்து குப்பையில் கொட்டி செல்கின்றனர். பெங்களூரா ரக மாங்காய்களை மண்டிகளில் வியாபாரிகள் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மா தோட்டங்களிலும் விவசாயிகள் மாங்காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு வைத்துள்ளனர்.
அவை மரங்களிலிருந்து விழுந்து அழுகி வீணாகி வருகிறது. பறித்த மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால், வேதனையடைந்த விவசாயிகள் சாலையோரங்களிலும், குப்பைகளிலும் கொட்டி செல்கின்றனர். மேலும், ஒவ்வொரு வருடமும் இதே நிலை நீடித்து வருவதால், விவசாயிகள் சிலர் பல தலைமுறையாக வளர்த்து வந்த மா மரங்களை ஏக்கர் கணக்கில் வெட்டி அழித்து வருகின்றனர். தமிழகத்தில் மா விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுவதில்லை. ஆந்திர மாநில அரசைப்போல், தமிழக அரசும் மா விவசாயிகள் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மா விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் சவுந்தராஜன் கூறுகையில், ‘முத்தரப்பு கூட்டத்தில் உரிய விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. மாங்கூழ் அதிபர்களுக்கு ஆதரவாக, விவசாயிகளின் உற்பத்தி செலவை பற்றி கவலைப்படாமல், கூட்டத்தை முடித்து வைத்தனர். ஆந்திர மாநிலத்தில் மா விவசாயிகனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில், அரசு மா விவசாயிகளை கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனையாக உள்ளது. 2 ஆண்டுகளாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும். மாங்கனி கண்காட்சி பயன் தராது என்பதால், கண்காட்சியை மா விவசாயிகள் புறக்கணிக்கிறோம்,’ என்றார்.
The post உரிய விலை இல்லாததால் மாங்காயை குப்பையில் கொட்டி விட்டு செல்லும் விவசாயிகள் மரங்களை வெட்டி சாய்க்கும் அவலம் appeared first on Dinakaran.