திருமலை: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஊல்லபலேம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகிருஷ்ணா (34). இவரது தந்ைத சீனிவாசரெட்டி, தாய் ஜெயம்மா. இவர்கள் இருவரும், உதயகிருஷ்ணா குழந்தையாக இருந்தபோதே உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து இறந்தனர். உதயகிருஷ்ணாவுக்கு பிரணய் என்ற தம்பி உள்ளார். இதனால் அண்ணன், தம்பி, தங்களது பாட்டி ரமணம்மாவின் ஆதரவில் வளர்ந்தனர். பள்ளி படிப்பை படித்து கொண்டே காலை மற்றும் மாலையில் உதயகிருஷ்ணா காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
சிறுவயது முதல் அவருக்கு ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என லட்சியம் இருந்துள்ளது. காவலி பகுதியில் உள்ள ஜவஹர்பாரதி அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர், போலீஸ் கான்ஸ்டபிள் வேலையில் சேர்ந்தார். பின்னர் ராமாயப்பட்டினத்தில் கடலோர காவல்படை கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்று அப்பணியில் சேர்ந்தார். பணியின்போது கடலோர காவல்படையின் இன்ஸ்பெக்டர் ஒருவர், உதயகிருஷ்ணாவை அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த உதயகிருஷ்ணா, உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். சிறுவயது முதலே உள்ள லட்சியப்படி ஐதராபாத்தில் உள்ள விடுதியில் தங்கி யுபிஎஸ்சி பயிற்சியில் ஈடுபட்டார். 3 முறை எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறாத நிலையில் 4வது முறையாக 780வது ரேங்க் பெற்றார். சிறந்த ரேங்க் அடைய மீண்டும் தேர்வு எழுதினார். இறுதியாக அவர் 350வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் அதிகாரியானார். அவருக்கு இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
The post உயர் அதிகாரி அவமானப்படுத்தியதால் கான்ஸ்டபிள் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரியான வாலிபர் appeared first on Dinakaran.