மும்பை: உத்தரபிரதேச மகா கும்பமேளாவில் பாசி, மணி மாலை விற்ற பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கொடுப்பதாக பிரபல இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், பாசி மணிகள் விற்கும் பெண் ஒருவரின் வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது காந்த பார்வை நடிகைகளை போன்று இருப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண்ணை சுற்றி சுற்றி புகைப்படம் எடுப்பதும், பேட்டி எடுப்பதுமாக உள்ளனர்.
கும்பமேளாவில் அனைவரது கவனத்தை ஈர்த்த அந்த பெண்ணின் பெயர் மோனலிசா போஸ்லே. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த அவர்களது குடும்பம், பல தலைமுறைகளாக பாசி, மணி, மாலைகளை விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறது. மோனலிசா தனது பெற்றோருக்கு உதவுவதற்காக சிறுவயதிலிருந்தே பாசி, மணி மாலைகளை விற்பனை செய்து வருகிறார். இந்தச் சூழலில்தான் அவர் மகா கும்பமேளாவில் பாசி, மணி, மாலைகளை விற்க பிரயாக்ராஜுக்கு வந்தார். அங்கே, மோனலிசாவின் அப்பாவித்தனமான முகமும், அவரது அழகிய கண்களும் பலரது கண்களை கவர்ந்தன. மோனலிசா குறித்த செய்திகள் அதிகமாக பேசப்படுவதால், அவருக்கு பாலிவுட்டிலிருந்தும் வாய்ப்புகள் வந்துள்ளதாகத் தெரிகிறது.
பாலிவுட் சினிமா இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தனது படத்தில் மோனலிசாவுக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘மோனலிசாவின் உருவ தோற்றமும், அவரது அப்பாவித்தனமும் என்னை மிகவும் கவர்ந்தது. எனது ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இப்படி ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு விவசாயியின் மகளாக நடிக்க மோனலிசா சரியான பொருத்தமாக இருப்பார் என்று கருதுகிறேன். அவரை விரைவில் சந்திக்க உள்ளேன். அவருக்கு முறையாக நடிப்பு கற்றுக் கொடுத்து, பின்னர் எனது படத்தில் நடிக்க வைப்பேன்’ என்றார்.
The post உத்தரபிரதேச மகா கும்பமேளாவில் பாசி, மணி விற்ற பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு: அழகில் மயங்கிய பிரபல இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.