
லக்னோ,
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி பிரேமா சாகு, தனது குடும்பத்தினருடன் கடந்த 1-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள தாக்கூர் ஸ்ரீ ராதாராமன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவரது தாலி செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கோவில்களில் இதுபோன்ற திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடத் தொடங்கினர். இந்த தேடுதல் வேட்டையின் முடிவில், திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த 10 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.18,652 ரொக்கப் பணம், பல்வேறு ஏ.டி.எம்., ஆதார், பான் கார்டுகள், பர்ஸ், லைசென்ஸ் மற்றும் பல ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் பெரும்பாலும் குழுவாக இணைந்து திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கோவில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க செயின்கள், மொபைல் போன்கள், பர்சுகள் உள்ளிட்டவற்றை இவர்கள் திருடியுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைத்து பெண்கள் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.