உதகை: உதகை அருகே தேயிலை பறிக்கச் சென்ற இடத்தில் வனவிலங்கு தாக்கி அஞ்சலை என்பவர் உயிரிழந்துள்ளார். உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள பேரார் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பேரார் அருகே உள்ள பொம்மன் நகரை சேர்ந்தவர் கோபால் இவரது மனைவி அஞ்சலை (50) இவர் பசுமை இலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றைய தினம் இவர் வீட்டிலிருந்து பசுமை இலைப் பறிப்பதற்காக சென்றுள்ளார்.
ஆனால் அவர் நேற்று மாலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். ஆனால் இரவு என்பதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் அரக்கோடு காலிபெட்டா பகுதியில் தேயிலை பறிக்கும் தொழிலுக்காக சென்ற போது அங்கு அஞ்சலையை வனவிலங்கு வேட்டையாடி இழுத்து சென்று அவரது உடல் உறுப்புகளை சாப்பிட்டு உடலை விட்டு சென்றுள்ளதை தோட்ட தொழிலாளர்கள் பார்த்தனர்.
உடனடியாக உதகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உதகை தெற்கு வனத்துறையினர் மற்றும் குன்னூர் போலீசார் அவரது உடலை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அவரது உடலை புலி அல்லது சிறுத்தை கொன்று பசுமையிலை தோட்டத்திற்குள் இழுத்து சென்று சாப்பிட்டிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.
பின்னர், அஞ்சலையின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அஞ்சலையை கொன்ற புலியை பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மூன்று நாட்களுக்கு அப்பகுதிக்கு தேயிலை தொழிலாளர்கள் போக வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
The post உதகை அருகே தேயிலை பறிக்கச் சென்ற இடத்தில் வனவிலங்கு தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.