சென்னை: அரசியல் நிலைப்பாடு வேறு, நாட்டு நலன் கருதி அரசுடன் ஒத்துழைப்பது வேறு. அந்த வகையிலேயே, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிலையை பிரதமரிடம் தெரிவித்தேன். நாட்டு நலன், மாநில உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘இத்தனை ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல், இப்போது கலந்து கொள்வது ஏன்? டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்க துறை நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே பிரதமரை சந்திக்க முதல்வர் செல்கிறார்’ என்றெல்லாம் அரசியல் எதிரிகள் கற்பனை சிறகுகளை பறக்கவிட்டனர்.