சென்னை: உணவு விற்பனை தொடர்பாக 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டது. வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://foscos.gov.in-ல் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற வேண்டும். உணவக ஊழியர்களுக்கு டைபாய்டு, மஞ்சள் காமாலை தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெயை ஒரு முறையே பயன்படுத்த வேண்டும்
உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களில் ஈ, பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி காட்சிப்படுத்த வேண்டும். உணவு எண்ணெயை ஒரு முறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும்.
செய்தித்தாளில் உணவுப்பொருளை பரிமாறக்கூடாது
செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவு நேரடியாக படும் வகையில் பரிமாறவோ பொட்டலமிடவோ கூடாது. உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும். சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளை செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. உணவு பரிமாற வாழை இலை, பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உணவு விற்பனை தொடர்பாக 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை..!! appeared first on Dinakaran.