சென்னை: தம்பி அஜித்குமார் கொலைக்கான நீதியைப் பெற்றுத் தர நிச்சயம் அதிமுக துணை நிற்கும் என இளைஞர் அஜித்குமாரின் தாயிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது காவலர்கள் தாக்குதலில் அஜித்குமார் மரணமடைந்தார். இந்நிலையில், இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது; துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் உங்கள் மகன் அஜித் குமார் உயிரிழந்திருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம். இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம். இது யாராளும் மன்னிக்க முடியாதது.
பெற்ற தாய்க்கு மட்டுமே அதன் வலி தெரியும். உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. இருந்தாலும், நீங்கள் மனம் தளராமல் இருந்தால் தான் வீட்டில் உள்ளவர்களும் மனம் நிம்மதியுடன் இருப்பார்கள். நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும். மனம் தளராமல் இருங்கல். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
The post உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: இளைஞர் அஜித்குமாரின் தாய்க்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் appeared first on Dinakaran.