
வாஷிங்டன்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 118வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் கடந்த வாரம் உக்ரைன், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ரஷியா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.
அதேபோல், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புதினும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், போர் நிறுத்தம் தொடர்பாக அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஆனால், அந்த நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுத்துள்ளது. இதனால், உக்ரைன், ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 90 நிமிடங்களுக்குமேல் இரு தலைவர்களும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனில் போரை நிறுத்துவது தொடர்பாக புதினிடம் டிரம்ப் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.