
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியிலும், அதை சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளிலும் வங்காளதேச நாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து, நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னிமலை காவல்துறை மற்றும் கியூ பிரிவு அப்பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக 4 வங்காளதேச நாட்டினர் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் முகமது நயீம் உசேன், முகமது மைனர் உசேன், முகமது டோரிகுல் இஸ்லாம் மற்றும் முகமது குத்தீஸ் உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க சென்னிமலை பகுதியில் சோதனைகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.