பீர்ஷெபா: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவு செய்யப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் இடையேயான தாக்குதல் 7வது நாளாக நேற்றும் நீடித்தது. இரு நாடுகளும் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் மீது ஈரான் ஏவுகணைகள் மோதின. டெல் அவிவ் அருகே குடியிருப்பு கட்டிடமும் ஈரானின் தாக்குதலில் சேதமடைந்தது. இதில் சுமார் 240 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து ஈரானின் தலைவர் அயதுல்லா காமெனியை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார். ‘‘இஸ்ரேல் ராணுவம் அதன் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கு காமெனி தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதை இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி உள்ளது மற்றும் அறிந்திருக்கிறது” என்றார். இந்நிலையில் ஈரானில் மலையில் உள்ள ரகசிய யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தை தாக்குவதன் மூலமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து அதிபர் டிரம்ப் யோசித்து வருகிறார்.
இந்த நிலையத்தை அமெரிக்காவின் பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகளை தவிர வேறு எதனாலும் அழிக்க முடியாததாக கருதப்படுகின்றது. இஸ்ரேல் -ஈரான் இடையிலான மோதலில் அமெரிக்க ராணுவம் நேரடியாக ஈடுபடுமா என்பதை இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த புதிய பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானுக்கு கணிசமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதலை தணிக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோரை வெள்ளை மாளிகையில் சந்தித்ததாக இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல்? 2 வாரங்களில் முடிவு செய்வேன் என அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.