புதுடெல்லி: ஈட்டி எறிதல் வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின், கடந்த 2024, செப்டம்பரில், ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பறிகொடுத்தார். அந்த இடத்தை கிரேனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தட்டிப்பறித்தார். இந்நிலையில், சமீப காலமாக நடந்து வந்த ஈட்டியெறிதல் போட்டிகளில் நீரஜ் சோப்ரா சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறார்.
தென் ஆப்ரிக்காவில் கடந்த ஏப்ரலில் நடந்த ஈட்டியெறிதல் போட்டியில் நீரஜ் சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து, தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா, 90.23 மீட்டர் துாரம் ஈட்டியெறிந்து 2ம் இடத்தை பிடித்தார். பின்னர், போலந்தில் நடந்த ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு போட்டியிலும், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. பின், இம்மாதம் நடந்த பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியிலும், ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டியிலும் முறையே, 88.16, 85.29 மீட்டர் துாரம் ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ரா வெற்றிகளை பதிவு செய்தார்.
இந்த வெற்றிகளால், தரவரிசைப் பட்டியலில், நீரஜ் சோப்ராவுக்கு 1445 புள்ளிகள் கிடைத்தன. அதனால், ஓராண்டு இடைவெளிக்கு பின், அவர் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 2ம் இடத்துக்கு தள்ளப்பட்ட கிரேனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 1431 புள்ளிகள் பெற்றுள்ளார். ஜெர்மன் வீரர் ஜூலியன் வெபர் 1407 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், பாகிஸ்தானை சேர்ந்த நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம், 1370 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளனர்.
The post ஈட்டியெறிதல் தரவரிசை நீரஜ் சோப்ரா மீண்டும் நம்பர் 1 appeared first on Dinakaran.