பேசக்கூடாததைப் பேசி திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தைப் பறிகொடுத்த பொன்முடி, நீதிமன்ற நெருக்கடியால் மந்திரி என்ற மகுடத்தையும் இழந்தார். ஆனாலும், தன்னை மீறி தனது எல்லைக்குள் யாரும் அதிகாரம் செலுத்திவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் பொன்முடி, இப்போது இலாகா இல்லாத அமைச்சர் போலவே வலம் வருவதாக ஆளும் கட்சியினரே அறிக்கை வாசிக்கிறார்கள்.
தவிர்க்க முடியாத நிர்பந்தத்தின் காரணமாக பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினாலும் விழுப்புரம் மாவட்டத்துக்கு புதிய அமைச்சர், பொறுப்பு அமைச்சர் என யாரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்கவில்லை. இந்த நிலையில், அண்மையில் தேர்தல் பணிகளை கவனிக்க மண்ட பொறுப்பாளர்களை அறிவித்த போது அமைச்சர் எ.வ.வேலு விழுப்புரம் மாவட்டத்துக்கு மண்டலப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, பொன்முடிக்கு போட்டியாக இன்னொரு அமைச்சர் மாவட்டத்துக்குள் அதிகாரம் செய்ய வருவதைக் கொண்டாடித் தீர்த்த பொன்முடி எதிர்ப்பாளர்கள், வேலுவை வரவேற்று சுவர் விளம்பரங்களை தீட்டினார்கள். அதிலும் சிலர் அரசியல் செய்தார்கள்.