இலங்கைக்கு கப்பலில் செல்லும் பயணிகள் வசதிக்காக மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் நாகை வரை நீட்டிக்கப்படுமா?

2 months ago 10

மதுரை: தமிழகத்தில் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது. இதன்மூலம் இலங்கை அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மற்றும் கேரளாவை சேர்ந்தோர் நாகப்பட்டினம் சென்று அங்கிருந்து இலங்கைக்கு கப்பலில் பயணிக்க விரும்புகின்றனர்.

இதேபோல், இலங்கையின் சுற்றுலா, ஆன்மிக பக்தர்கள் தென்னிந்திய கோயில்களுக்கு குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதியம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி உள்ளிட்ட கோயில்களுக்கு அதிகளவில் பயணித்து வருகின்றனர். இலங்கை பயணிகள் கப்பலில் நாகப்பட்டினம் வந்து, அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு பயணிக்க தற்போது நேரடியாக ரயில் வசதி இல்லை.

இலங்கைக்கு சுற்றுலா நிமித்தமாக தென்மாவட்டத்தினர் பயணிக்கின்றனர். இவர்களும் நாகப்பட்டினம் செல்ல நேரடி தினசரி ரயில் சேவை இல்லை. இதனால் இரு மார்க்கங்களிலும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஸ்ரீராம் கூறும்போது, ‘‘மதுரை – புனலூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலை திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீட்டிப்பு செய்யவேண்டும்.

இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக இலங்கையிலிருந்து பிற்பகல் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடைகிறது. இந்த கால அட்டவணையை வைத்து, மதுரை – புனலூர் ரயிலை நீட்டிப்பு செய்து கால அட்டவணை தயாரிப்பதும் அவசியம்’’ என்றார்.

The post இலங்கைக்கு கப்பலில் செல்லும் பயணிகள் வசதிக்காக மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் நாகை வரை நீட்டிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article