இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

5 hours ago 1

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16-ம் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள் எனும் நிலையில், இருமுறை அவர்கள் மீது இலங்கை அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.

தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலமும், அவர்களிடம் உள்ள பொருள்களை கொள்ளையடிப்பதன் மூலமும் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த சில நாள்களில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலும், இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையும் பா.ம.க.வின் நீண்ட நாள் குற்றச்சாட்டை உறுதி செய்திருக்கிறது. இது தொடரக்கூடாது.

தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில் இரு தரப்பு மீனவர்களும் பயனடையும் வகையில் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான திட்டத்தை வகுப்பதுதான் சரியானதாக இருக்கும். இதை மத்திய அரசுதான் செய்ய முடியும் எனும் நிலையில், அதற்கான அழுத்தத்தை தமிழக அரசுதான் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

ஆனால், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். மீனவர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கான அழுத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article