
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு ஏற்றம் கண்டது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் ஒரு முறை சந்தித்து இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் கால் பதிக்கும். அத்துடன் முதலாவது தகுதி சுற்றில் செய்த தவறுகளை களைந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரம் காட்டும்.
அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 7-வது முறையாக இறுதிப்போட்டியை எட்ட மும்பை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 16 ஆட்டங்களிலும், மும்பை அணி 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.