இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு: கேப்டன் படிதார் கூறியது என்ன..?

1 day ago 4

முல்லான்பூர்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, பெங்களூரு வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதுடன், விக்கெட்டுகளையும் வேகமாக பறிகொடுத்தது. வெறும் 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் அணி 101 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 26 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 10 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பில் சால்ட் 56 ரன்களுடனும், ரஜத் படிதார் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் அளித்த பேட்டியில், "நாங்கள் எப்படி பந்து வீச வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான திட்டங்களை கொண்டிருந்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்ச்சை சரியாகப் பயன்படுத்தினர். சுயாஷ் பவுலிங் செய்த லைன், லென்த் ஆகியவை சிறப்பாக இருந்தது. ஒரு கேப்டனாக அவரது பந்துவீச்சைப் பற்றி நான் தெளிவாக இருக்கிறேன். ஸ்டம்ப்பை டார்கெட் செய்வதே அவருடைய பலமாகும். நான் எப்போதும் அவருக்கு தெளிவான யோசனைகளை வழங்க விரும்புகிறேன், அவரை குழப்ப விரும்பவில்லை. அவர் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை.

இந்தத் தொடர் முழுவதுமே நாங்கள் நிறைய பயிற்சிகளை செய்துள்ளோம். அதனால் ஒரு நாள் பயிற்சி செய்யாதது உங்களைப் பாதிக்காது. பில் சால்ட் பெரும்பாலான போட்டிகளில் நல்ல தொடக்கத்தை கொடுக்கும் விதம் சிறப்பானது. நான் அவருடைய பெரிய ரசிகன். ஓய்வறையிலிருந்து அவரைப் பார்ப்பது ஒரு விருந்தாக இருக்கும். ஆர்சிபி ரசிகர்களுக்கு எப்போதும் நான் நன்றி சொல்வேன். ஏனெனில் சின்னசாமி மட்டுமின்றி நாங்கள் விளையாடும் அனைத்து மைதானங்களிலும் அவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம், எனவே எங்களை தொடர்ந்து ஆதரியுங்கள். இன்னும் ஒரு போட்டியில் வென்று விட்டு நாங்கள் ஒன்றாக கொண்டாடுவோம்" என்று கூறினார்.

Read Entire Article