
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார். நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (மார்ச்.13) வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி த.வெ.க. மாவட்ட பொறுப்பாளர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 95 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகியிருந்த நிலையில் மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களை நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணியளவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து பொறுப்புகளை வழங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.