நாகர்கோவில்: நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிக்காக கணியாகுளம் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான 87 கி.மீ தூரம் இரட்டை ரயில்பாதை பணிகள், 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவடையாமல் உள்ளது. இந்த பணிக்காக, திருவனந்தபுரம் – பாறசாலை வரை 37.59 ஹெக்டரும், பாறசாலை – கன்னியாகுமரி வரை தமிழக பகுதியில் 51.04 ஹெக்டரும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டி இருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் ரயில்வே பணிகளுக்கான நில ஆர்ஜித பணிகள் மந்தகதியில் நடந்தன. திமுக அரசு பொறுப்பேற்றதும், இந்த பணிகளை வேகப்படுத்தும் வகையில், தனி தாசில்தார் நியமிக்கப்பட்டு, வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜித பணிகள் வேகமெடுத்துள்ளன. கேரள பகுதியில் நில ஆர்ஜிதத்துக்கு ரூ.1,312 கோடியும், தமிழ்நாடு பகுதிக்கு ரூ.298.57 கோடியும் கடந்த ஆண்டு ரயில்வே வழங்கி இருந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி – நாகர்கோவில் டவுன் இடையே 19.26 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த ரயில் பாதையை ஆய்வு செய்து, திருப்தி தெரிவித்தார். மற்ற இடங்களில் பணிகள் ஆமை வேகத்தில் தான் நடக்கின்றன. குறிப்பாக இரணியல், பள்ளியாடி, குழித்துறை பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தான் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த பகுதியில் அதிகளவில் மண் சரிவு ஏற்படும் பகுதி என்பதுடன், வளைவுகள் அதிகமாக இருப்பதால் தண்டவாளம் பதிக்கும் பணிகளும் சிரமத்துக்கு இடையே நடந்து வருகிறது.
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகளுக்காக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ரூ.1009 கோடி அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் இரட்டை ரயில் பாதை பணிகள், வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரட்டை ரயில் பாதை பணிகளின் ஒரு அங்கமாக, நாகர்கோவில் டவுண் – இரணியல் இடையிலான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பார்வதிபுரம் ரயில்வே பாலத்துக்கு கீழ், ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன. இதற்காக பார்வதிபுரம் அருகே உள்ள, கணியாகுளத்தில் செயல்பட்டு வந்த ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது.
தண்டவாளம் அமைக்கும் இடத்தில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டு அதில் மண், ஜல்லி நிரப்பி அந்த பகுதி சமன் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சமன் செய்யப்பட்டு உறுதி தன்மை சோதனை முடிந்த இடங்களில், தண்டவாளம் பதிக்கப்பட்டு வருகிறது. தண்டவாளம் பதிக்கப்பட்ட பின் ஜல்லி நிரப்பி, இயந்திரம் மூலம் அவை சமன் செய்யப்படுகின்றன. கணியான்குளம் ரயில்வே கேட் மூடப்பட்டு உள்ளதால், அந்த பகுதி வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் செல்கின்றன. நாகர்கோவில் டவுன் – இரணியல் இடையே வரும் செப்டம்பருக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
The post இரட்டை ரயில் பாதைக்காக தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்: கணியாகுளம் ரயில்வே கேட் மூடல் appeared first on Dinakaran.