இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பருடன் புகைப்படம்... ஆத்திரமடைந்த காதலன்... அடுத்து நடந்த கொடூரம்

1 day ago 3

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தில் பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர், கார் பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு அஸ்விகா(வயது 19) உள்பட 2 மகள்கள் உள்ளனர். அஸ்விகா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஐ.டி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதேபோல் பொள்ளாச்சி-உடுமலை ரோடு அண்ணாமலையார் நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் பிரவீன்குமார்(23). தனியார் நிதி நிறுவன ஊழியர். அஸ்விகாவுக்கும், பிரவீன் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் காதலாக மாறியதாக தெரிகிறது. இதனால் 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசி காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையில் அஸ்விகா கடந்த சில நாட்களாக பிரவீன் குமாருடன் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் நேற்று மதியம் அஸ்விகாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் அஸ்விகா மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரவீன்குமார் தான் வைத்து இருந்த கத்தியால், அஸ்விகாவை முகம், கழுத்து உள்ளிட்ட 5 இடங்களில் குத்திவிட்டு சென்றார். இதில் பலத்த கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அஸ்விகா நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே குடும்பத்தினர் மற்றும் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விகாவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய பிரவீன்குமாரை வடுகபாளையம் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதை அறிந்த அவர் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து தாலுகா போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்விகாவின் வீட்டு அருகில் பிரவீன்குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் சிலிண்டர் எடுப்பதற்காக அஸ்விகாவின் வீட்டிற்கு பிரவீன்குமார் வந்தபோது இருவரும் தங்களது காதலை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதை அறிந்த பெற்றோர் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அங்கிருந்து அண்ணாமலையார் நகருக்கு குடும்பத்துடன் பிரவீன்குமார் குடியேறினார். இந்தநிலையில் அஸ்விகா, தன் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தெரிகிறது.

இதைப்பார்த்த பிரவீன் குமார், அஸ்விகாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அஸ்விகா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சென்று கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article