
பக்ரீத் பண்டிகையின் முக்கியத்துவம்:
பக்ரீத் பண்டிகை, இறைத்தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது. இப்ராகீம் நபிக்கு குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த நிலையில், இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள், இப்ராகீம் நபி தனது மகன் இஸ்மாயிலை இறைவனுக்கு பலியிட வேண்டும் என்று ஒரு கனவு கண்டார். இது இறைவனின் கட்டளை என்று உணர்ந்த இப்ராகீம் நபி, தன் மகனை பலியிட துணிந்தார். அப்போது இறைவன், இஸ்மாயிலுக்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிட கட்டளையிட்டார். இந்தச் சம்பவத்தின் அடிப்படையில், இறைவனுக்கு கீழ்ப்படிந்து தியாகம் செய்வதன் அடையாளமாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
எப்போது கொண்டாடப்படுகிறது?
பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ் மாதம் 10-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த தேதி ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். 2025-ம் ஆண்டில், இந்தியாவில் இன்று (ஜூன் 7, சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது ஹஜ் யாத்திரையின் நிறைவையும் குறிக்கிறது.
பக்ரீத் கொண்டாட்டங்கள்:
பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் கீழ்க்கண்டவாறு கொண்டாடுகிறார்கள்.
சிறப்புதொழுகை:
இஸ்லாமியர்கள் காலை நேரத்தில் பள்ளிவாசல்களிலோ அல்லது மைதானங்களிலோ ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்துவார்கள்.
பலியிடுதல்:
தொழுகைக்குப் பிறகு, வசதியுள்ளவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற ஆரோக்கியமான விலங்குகளை இறைவனுக்காக பலியிடுவார்கள். இந்தப் பலி இறைச்சி மூன்று பங்குகளாகப் பிரிக்கப்படும். ஒரு பங்கு குடும்பத்திற்கும், ஒரு பங்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், மீதமுள்ள ஒரு பங்கு ஏழைகளுக்கும் வழங்கப்படும். இது தானம் மற்றும் இரக்கத்தின் அடையாளமாக விளங்குகிறது.
புத்தாடை அணிதல்:
மக்கள் புத்தாடைகள் அணிந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வார்கள்.
உணவு பரிமாற்றம்:
பலி இறைச்சியைக் கொண்டு விதவிதமான உணவுகள் சமைக்கப்பட்டு, குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து உண்ணப்படும். ஏழைகளுக்கும் உணவளிக்கப்படும்.
கல்லறை தரிசனம்:
சிலர் இறந்தவர்களின் கல்லறைகளுக்குச் சென்று அவர்களுக்கு பிடித்தமான ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து வழிபாடு செய்வார்கள்.
இந்த பண்டிகை, தியாகம், ஈகை, ஒற்றுமை மற்றும் இறைவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.