சென்னை: “முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் கூறி, பிற மதத்தவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் பாஜகவினரே பரப்புகின்றனர். இந்து, கிறிஸ்தவர்களின் சொத்து குறைவாக இருக்கிறது என்பதற்கு ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா? இந்துகளை இந்துக்களாக உணர வைக்க முடியாததால் சிறுபான்மையினருக்கு எதிராக திசை திருப்புகின்றனர்,” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியது: “வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறும்போது அனைவருக்கும் எதிர் கருத்து கூற வாய்ப்பளிக்கப்பட்டது. நள்ளிரவு வரை பேச அனுமதி வழங்கப்பட்டது. மேலோட்டமாக பார்த்தால் அனைத்தும் ஜனநாயக முறையில் நடந்தேறியதுபோல தெரியும். எனினும், பாஜகவிடம் உள்ள பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தை படுகொலை செய்தனர். இதுதான் நவீன பாசிசம்.