சென்னை: இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்த இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட பழனிவேல் என்பவரது மகன் சரவணமுத்து, இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக சரவணமுத்துவும், அவரது மனைவி தமிழ்செல்வியும் அகதிகளாக கடந்த 1984-ம் ஆண்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின்னர், வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் வசித்தனர். கடந்த 1987-ம் ஆண்டு அவர்களுக்கு ரம்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. ரம்யாவுக்கு பிறப்பு சான்றிதழ், வாக்காளர் சான்றிதழ் என அனைத்து சான்றிதழ்களும் கோவையில் பெறப்பட்டு, பாஸ்போர்ட்டும் பெற்றுள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்து கோவையை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் முடித்த ரம்யாவுக்கு ருத்ரன் (9) என்ற மகன் உள்ளார். ருத்ரனுக்கும் கோவையில் முறைப்படி பிறப்புச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ரம்யா கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.