
2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார். இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்கு சென்றார்.
10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர். இந்த நிலையில் நார்வே செஸ் தொடரில் 3-வது இடம் பிடித்த குகேஷுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.