
லிமாசோல்,
பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். நிகோசியா நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவ்லிட்ஸ் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது;-
"இந்தியா விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும். இந்தியா மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். வரி சீர்திருத்தங்கள், சரக்கு மற்றும் சேவை வரி, முறைப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் வரி, குற்றமற்ற சட்டங்கள் ஆகியவற்றை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். மேலும் வணிகம் செய்வதை எளிதாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து, துறைமுகம், கப்பல் கட்டுதல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் மற்றும் பசுமை மேம்பாட்டுத் துறைகளில் நிலையான வளர்ச்சி ஆகியவை இந்தியாவுடன் கூட்டு சேர்வதற்கு சைப்ரஸ் நாட்டை சேர்ந்த நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை திறந்துள்ளன.
கடந்த 23 ஆண்டுகளில் ஒரு இந்திய பிரதமர் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் செய்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த முதல் பயணத்தின்போது இத்தகைய வர்த்தக மாநாடு நடைபெறுகிறது. இது இந்தியா-சைப்ரஸ் உறவில் வணிக நிறுவனங்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
இந்தியாவிற்கு, குறிப்பாக அந்நிய நேரடி முதலீட்டுத் துறையில், சைப்ரஸ் ஒரு முக்கியமான பொருளாதார கூட்டணியாக இருந்து வருகிறது. இந்தியா-சைப்ரஸ் இடையிலான இருதரப்பு உறவு வளர்ச்சிக்கான மகத்தான ஆற்றலை கொண்டிருக்கிறது."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.